வெள்ளை வானில் ஆட்களைக் கடத்தி முதலைக்கு போட்டதாக தேர்தலுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்பாட்டில் வெளியிடப்பட்ட பரபரப்புத் தகவல் குறித்து விசாரணைகளை குற்றப் புலனாய்வுத்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
இது குறித்த அறிக்கையை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இன்று குற்றப் புலனாய்வுத் துறையினர் சமர்ப்பித்துள்ளனர்.
நவம்பர் 10-ஆம் திகதி கொழும்பில் ராஜித சேனாரத்ன பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
அதன்போது வெள்ளை வான் சாரதிகள் என இருவர் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
அவர்கள் இருவரும் ராஜபக்ஷ ஆட்சியின் போது நடந்ததாகக் கூறப்படும் கொலைகள் மற்றும் கடத்தல்கள் குறித்து பரபரப்பு தகவல்களை வெளியிட்டனர்.
ஆட்கள் கடத்தப்பட்டு முதலைகளுக்கு இரையாகப் போடப்பட்டதாகவும் அவர்கள் இருவரும் கூறினர்.
இந்த குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்த விசாரணை தொடங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறையினர் தலைமை நீதவானிடம் நேற்று தெரிவித்துள்ளனர்.
வெள்ளை வான் ஓட்டுநர்கள் என தம்மை அறிமுகம் செய்த சந்தேக நபர்களான அன்ரனி டக்ளஸ் பெர்னாண்டோ மற்றும் அதுலா சஞ்சயா மதானாயகே ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.
மேலும், சந்தேக நபர்கள் இருவருக்கும் வழங்கப்பட்ட தங்குமிட வசதிகள் குறித்தும், அந்த சம்பவம் தொடர்பாக உண்மைகளை மறைப்பது குறித்தும் விசாரணை நடத்தப்போவதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து குறித்த பத்திரிகையாளர் சந்திப்பின் திருத்தப்படாத வீடியோ பதிவை ஒப்படைக்கும்படி நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு உத்தரவிட்டது.
விசாரணையின் முன்னேற்றம் குறித்து நாளை நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.